பிரான்ஸுக்கு கடத்த முயற்சி.. ரூ.12 கோடி மதிப்புள்ள உலோக சாமி சிலைகள் மீட்பு!

சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள தொன்மையான உலோக சுவாமி சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்ட்டுள்ளனர்.
2016 ஆம் ஆண்டு போடப்பட்ட வழக்கு சம்பந்தமான விசாரணையின் போது சப்ரெய்ன் தெரு,புதுச்சேரி என்ற முகவரியில் தொன்மையான கோவில் சிலைகள் உரிய ஆவணங்கள் இல்லாமல் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறை இயக்குனர் ஜெயந்த் முரளி, அவர்களின் உத்தரவின் பேரில் காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர்.அசோக் நடராஜன் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைத்து சப்ரெய்ன் தெரு, புதுக்சேரி என்ற விலாசத்திற்கு சென்று சோதனை செய்யப்பட்டது.
மேற்படி சோதனையின் போது அங்கு காலம் சென்ற ஜேசாப் கொலம்பானி என்பவரின் வசம் இருந்த தொன்மையான 3 சிலைகள் – நடராஜர், வீணாதாரா சிவன் மற்றும் விஷ்ணு உலோக சிலைகள் உரிமையாளர் குறித்த சட்டப்படி
ஏற்கத்தக்க ஆவணங்கள் எதுவும் இல்லாமல் இருந்தது. மேற்படி சிலைகள் தமிழகத்தின் கோவில்களில் இருந்து 1980 க்கு முன்பாக களவாடப்பட்ட சிலைகளாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் அம்மூன்று சிலைகளும்
கைப்பற்றப்பட்டன.
இந்த சிலைகள் சுமார் 600 வருடங்களுக்கு மேலாக தொன்மை வாய்ந்தது. இவை சோழர்கள் மற்றும் விஜய நகரப் பேரரசுக்கு இடைப்பட்ட ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தவை என கருதப்படுகிறது. இந்த சிலைகள் ஜோசப் கொலம்பானி அவர்களின் வசம் எப்படி, எவர் மூலம் எப்பொழுது கிடைக்கப் பெற்றது என்பது குறித்த ஆவணங்களும் இல்லை. இச்சிலைகளை பிரான்ஸ் நாட்டிற்கு ஒருமுறை கடத்த முயற்சி நடந்திருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் இந்த சிலைகள் எந்த கோவிலை சேர்ந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கைப்பற்றப்பட்ட சிலைகள் தொன்மையானது என்று தொல்லியல் சான்று பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் இந்த சிறப்பான செயலினை காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு, அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.