44 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு !!
தமிழக காவல்துறையில் குறிப்பாக ஐபிஎஸ் அதிகாரிகள் பலரும் கடந்த சில நாட்களாகவே பணி ஓய்வு பெற்று வருகின்றனர். இதனால் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என தகவல்கள் வெளியாகியது. இந்த சூழலில் 44 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு போலீஸ் அகடாமியில் ஐபிஸ் அதிகாரியாக இருந்த அமல்ராஜ் தற்போது தாம்பரம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தாம்பரம் காவல் ஆணையராக இருந்த ரவி இரண்டு நாட்களுக்கு முன்பு ஓய்வுபெற்றதையடுத்து தற்போது அப்பகுதிக்கு ஆணையராக அமல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே போல் சென்னையில் கூடுதல் ஆணையராக இருந்த கண்ணனை ஆயுதப்படை ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த தேன்மொழி ஐபிஎஸ்-யை தற்போது வடக்கு மண்டல ஐஜியாக தமிழ்நாடு அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது.
கரூர் மாவட்டத்திற்கு சுந்தரவதனம், திண்டுக்கல் மாவட்டத்திற்கு பாஸ்கரன், மதுரை மாவட்டத்திற்கு சிவபிரசாத் மற்றும் திருவாரூர் மாவட்டத்திற்கு சுரேஷ் குமார் ஆகியோர் எஸ்பிக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், முக்கிய அதிகாரிகள் மற்றும் துணை ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.