அன்வர் ராஜாவை அடிக்க பாய்ந்த EPS டீம்… நடந்தது என்ன?
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. நகராட்சி, மாநகராட்சி தேர்தலை எதிர்கொள்வது, முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள், அவைத்தலைவர் தேர்வு, சசிகலாவின் செயல்பாடுகள் ஆகியன குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கட்சியின் வளர்ச்சி தொடர்பாகவும், அடுத்தக்கட்டத்திற்கு அதனை உயர்த்துவது தொடர்பாகவும் நடந்த ஒரு கூட்டத்தில் மூத்த மற்றும் முன்னாள் எம்.பி.யை, முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அடிக்க பாய்ந்த சம்பவம் அதிமுகவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் படுதோல்விக்கு காரணம் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் தான் என முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா தொடர்ந்து விமர்சித்து வருகிறார். பல்வேறு யூ-டியூப் சேனல்களுக்கு கொடுத்த பேட்டிகளில் கூட அதிமுகவின் சரிவிற்கு காரணம் பாஜக தான் என பகிரங்கமாக குற்றச்சாட்டியுள்ளார். வர உள்ள நகராட்சி, மாநகராட்சி தேர்தலையும் பாஜகவுடன் இணைந்து எதிர்கொள்ள அதிமுக முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் அன்வர் ராஜா ஊடகங்களில் பாஜகவை விமர்சித்து வருவது தொடர்பாக கூட்டத்தில் பேச்சு கிளம்பியுள்ளது.
மேலும் விகே சசிகலாவிற்கு ஆதரவாகவும் அன்வர் ராஜா கருத்து தெரிவித்து வருவது தொடர்பாகவும், முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் அன்வர் ராஜாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அன்வர் ராஜா விளக்கமளித்த போது கூட அவரை பேச விடாமல் கூச்சலிட்டுள்ளனர்.
இதனிடையே சிவி சண்முகம் அன்வர் ராஜாவை அடிக்க பாய்ந்ததாகவும் தெரிகிறது. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சண்டை நடந்தது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இது எங்கள் அண்ணன், தம்பி சண்டை பெரிசா ஒன்றும் இல்லை என பூசி மழுப்பிவிட்டனர். மேலும் சசிகலாவை கட்சியில் சேர்ப்பது தொடர்பாக பேசியதற்கு அன்வர் ராஜா வருத்தம் தெரிவித்துவிட்டார் என்றும் பூசி மொழுகிவிட்டனர். பாஜகவை பற்றி ஒருவர் எச்சரித்துக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகியை தனது கட்சியில் சேர்த்திருப்பது எவ்வளவு பெரிய துரோகம் என்ற கேள்விகள் அதிமுக தொண்டர்களிடையே எழுந்துள்ளது.