‘கோ பேக் மோடி’க்கு வேலையில்லாம போச்சே… பிரதமர் அலுவலகம் வெளியிட்ட திடீர் உத்தரவு!
தமிழ்நாட்டில் வரும் ஜனவரி 12ம் தேதி 11 மருத்துவக் கல்லூரிகளை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி திறந்து வைக்கப்பார் என பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரிகள் 37 உள்ளன. இந்நிலையில் கடந்த ஆண்டு நாடு முழுவதும் 75 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. இதில் தமிழ்நாட்டிற்கு 11 மருத்துவ கல்லூரிகள் ஒதுக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களான அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் தலா ஒரு மருத்துவக்கல்லூரி வீதம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது நிறைவடைந்துள்ளது.
இதனை வரும் 12ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி விருதுநகர் மாவட்டத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை நேரடியாக வந்து தொடங்கி வைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் ஜனவரி 12ம் தேதி மாலை 4 மணி அளவில் காணொலி காட்சி வாயிலாக 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் திறந்துவைப்பார் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பிரதமர் மோடி நேரில் பங்கேற்பது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சென்னை தரமணியில் தற்காலிகமாக கட்டத்தில் இயங்கி வருகிறது.இதற்காக புதிதாக கட்டப்பட்டுள்ள செம்மொழி மத்திய தமிழாய்வு நிறுவனத்திற்கான புதிய கட்டிடத்தையும் பிரதமர் காணொலி காட்சி வாயிலாக திறந்துவைக்க உள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் இருந்து வரும் 12-ம் தேதி மாலை 4 மணியளவில் காணொலி காட்சி மூலம் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.