ஏமனில் பயங்கரம் – வான்வழி தாக்குதலில் 70 கைதிகள் பலி
மத்திய கிழக்கு நாடான ஏமனில் சவூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய விமான தாக்குதலில் 70க்கும் மேற்பட்ட கைதிகள் இறந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடலை மீட்பு பணியினர் வெளியே எடுக்கும் வீடியோ காட்சி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இது மக்களிடையே பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
சரியான இறப்பு எண்ணிக்கை தெளிவாக இல்லை. குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டதாகக் எல்லைகளற்ற மருத்துவ தொண்டு நிறுவனமான Médecins Sans Frontières (MSF) கூறியுள்ளது.இத்தாக்குதலை ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கண்டித்துள்ளார்.சவூதி தலைமையிலான கூட்டுப் படைகள் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஹவுதி கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிட்டு வருகின்றன.சண்டையின் நேரடி விளைவாக 10,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தாக்குதல் குறித்து இதுவரை சவுதி எந்த விளக்கமும் அளிக்கவில்லை. முன்னதாக, ஏமனில் இயங்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் திங்கட்கிழமை ட்ரோன் மூலம் அடுத்தடுத்துத் தாக்குதல் நடத்தினர். இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த மூவரில் இருவர் இந்தியர்கள். ஒருவர் பாகிஸ்தானியர்.
அபுதாபி விமான நிலையம் அருகே உள்ள முசாஃபா பகுதியில் செயல்பட்டு வரும் எண்ணெய் நிறுவனமான ADNOC-ஐ குறிவைத்து இத்தாக்குதலை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தினர். ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏமன் தலைநகர் சனாவில் சவுதி கூட்டுப் படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் 12-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதன் காரணமாக பதற்றம் நீடிக்கிறது.