தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கா?… ராதாகிருஷ்ணன் பரபரப்பு விளக்கம்!

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 30 ஆயிரத்து 215 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 004 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 30 ஆயிரத்து 215 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது. கொரோனா தொற்றுக்கு 2 லட்சத்து 06 ஆயிரத்து 484 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், நேற்று ஒரே நாளில் மட்டும் 46 பேர் தொற்றால் உயிரிழந்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்படி தமிழ்நாட்டில் தீயாய் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள இரவு நேர மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் தீவிரமாக பரவி வருவதால் தமிழ்நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்புள்ளதா? என்ற அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் தமிழ்நாட்டில் முழு நேர ஊரடங்கிற்கு வாய்ப்புள்ளதா என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராதாகிருஷ்ணன், ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவக்கூடியது. தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கொரோனா பரவலின் தீவிரம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தற்போதைய நிலவரப்படி அமலில் உள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என தெரிவித்த ராதாகிருஷ்ணன், தொடர்ந்து கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது அல்லது முழு ஊரடங்கு தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *