உக்ரைனில் சிக்கித் தவிக்கும் உத்தரகண்ட் மக்கள்… மாநில டிஜிபி தகவல்..!
ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருகிறது. உக்ரைனும் ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் கொடுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யப் படைகள் உக்ரைனுக்குள் நுழைந்து முக்கிய பகுதிகளை கைப்பற்றி வருகின்றனர். இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 188 பேர் உக்ரைனில் சிக்கி தவித்து வருவதாக அம்மாநில டிஜிபி அசோக் குமார் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் ஏற்படும் அபாயம் இருப்பதை இந்திய அரசு உக்ரைனில் இருக்கும் இந்திய மக்களை பாதுகாப்பாக நாட்டைவிட்டு வெளியேற அறிவுறுத்தினர். அதற்காக விமான சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. இருப்பினும், பல்வேறு இந்திய மக்கள் இன்னும் உக்ரைனில் சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்களை இந்தியாவிற்கு அழைத்து வரும் முயற்சியில் இந்திய வெளியுறவுத் துறை தீவிரமாக இறங்கியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பலர் உக்ரைனில் சிக்கி இருப்பது குறித்து டிஜிபி அசோக் குமார் கூறி இருப்பதாவது, உத்தரகண்டினைச் சேர்ந்த 188 பேர் உக்ரைனில் சிக்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களை மீட்டு பத்திரமாக தாயகம் கொண்டு வர அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உத்தரகண்ட் மாநிலத்திற்கான உதவி எண் 112 என்றார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் உக்ரைன் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.