“10 மணி நேரம் மின்வெட்டு”… இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி..
இன்று முதல் இலங்கையில் 10 மணி நேரம் மின்வெட்டு என இலங்கை மின்சார துறை அறிவித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த ஒரு மாதமாக இலங்கை அரசு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. ஒரு கிலோ அரிசி ரூ.448, ஒரு லிட்டர் பால் ரூ.263, என அத்தியாவசிய பொருட்கள் தொடங்கி பெட்ரோல், டீசல் வரை அனைத்து பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.
இலங்கையில் இந்த பொருளாதார நெருக்கடியால் டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு ரூ .287 வரை குறைந்துள்ளது. இது ஒருபுறமிருக்க இலங்கையில் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மின்வெட்டு இருந்த நிலையில் தற்போது ஒரு நாளைக்கு 10 மணி நேரம் மின்வெட்டு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காத நிலையில் தற்போது இந்த மின்வெட்டு நேரம் அதிகரித்து உள்ளது மக்களை மேலும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் எரிபொருள் இறக்குமதி செய்ய இலங்கை அரசிடம் போதிய அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாத காரணத்தால் எரிபொருள் இறக்குமதி செய்வதில் இலங்கை அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக எரிபொருள் பற்றாக்குறையை தவிர்க்க மின்வெட்டு நேரத்தை அதிகரித்து உள்ளதாக இலங்கை மின்சார துறை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை அரசு அனுமதித்து கொடுத்துள்ளது.