இந்த படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம்… யுஜிசி எச்சரிக்கை!
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள தொலைதூர படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படாததால் மாணவர்கள் சேர வேண்டாம் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) செயலர் ரஜினிஷ் ஜெயின் வெளியிட்ட அறிவிப்பில், திறந்தநிலை மற்றும் தொலைதூர படிப்புகளை நடத்த விரும்பும் உயர்கல்வி நிறுவனங்கள், விதிமுறைகளின்படி யுஜிசி-யிடம் முறையாக அங்கீகாரம் பெற வேண்டும்.
இந்நிலையில், தமிழகத்தின் அண்ணாமலை பல்கலைக்கழகம் தொலைதூர படிப்புகளுக்கு முறையாக அங்கீகாரம் பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்திவருவது தெரியவந்துள்ளது. இது தொலைநிலை படிப்புக்கான ஒழுங்குமுறை விதிகளை மீறும் செயலாகும்.
அண்ணாமலை பல்கலைகழகத்தில் உள்ள தொலைதூர படிப்புகளுக்கு 2014-15 கல்வி ஆண்டு வரையே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு எவ்வித படிப்புக்கும் பல்கலை. அங்கீகாரம் பெறவில்லை. அதன்படி அங்கீகாரமற்ற தொலைதூர, திறந்தநிலை படிப்புகள் செல்லாதவையாக கருதப்படும். அதுசார்ந்த மாணவர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்பில் ஏற்படும் சிக்கல்களுக்கு அந்த பல்கலைக்கழகமே பொறுப்பு. எனவே, சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.யில் உள்ள தொலைதூர படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அண்ணாமலை பல்கலைகழகத்தில் 200-க்கும் மேற்பட்ட தொலைதூரபடிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இதில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது படித்துவருவது குறிப்பிடத்தக்கது.