அந்த ட்விட்டர் நிறுவனம் என்ன விலை..!! ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் எலான் மஸ்க்..?
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியீட்டு வர்த்தக உலகில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இவரின் இந்த செயலால் பங்குகளின் மதிப்பு உயர வாய்ப்பு இருப்பதாக பங்குதாரர்களின் தரப்பில் கூறப்படுகிறது. ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் சுமார் 41 பில்லியன் டாலருக்கு, (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.12 லட்சம் கோடி) வாங்குவதற்கு நான் தயாராக இருப்பதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு ட்விட்டர் நிறுவனத்தில் 9 சதவீத பங்குகளை வாங்கியிருந்த நிலையில், தங்கள் குழுவில் இணைத்து செயல்பட வேண்டும் என ட்விட்டர் நிறுவனத்தின் தலைவர் பிரெட் டெய்லர் எலான் மஸ்க் க்கு அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால் எலான் மஸ்க் அதன் இயக்குநர்கள் குழுவில் இடம் பெற மாட்டேன் எனக் கூறி வெளியேறிய நிலையில் அடுத்த இரண்டு நாட்களிலேயே இந்த அறிவிப்பு வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து ட்விட்டர் நிறுவனத்தின் தலைவர் பிரெட் டெய்லருக்கு எலான் மஸ்க் புதன்கிழமை எழுதிய கடிதமானது வியாழக்கிழமை (நேற்று) வெளியானது. அந்தக் கடிதத்தில் எலான் மஸ்க் கூறியதாவது, உலகம் முழுவதும் சுதந்திரமான பேச்சுக்கான தளமாக ட்விட்டர் இருக்கும் என நம்பிதான் ட்விட்டர் நிறுவனத்தில் நான் முதலீடு செய்தேன்.
ஆனால் தற்போதைய சூழ்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தால் சேவையாற்ற முடியாது என இப்போது உணர்கிறேன். ட்விட்டர் ஒரு தனியார் நிறுவனமாக மாற்ற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என குறிப்பிட்டு இருந்தார். எனது கருத்தை பரிசீலனை செய்யவில்லை என்றால் பங்குதாரராக இருப்பதா, இல்லையா என்ற தனது நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.