பலவருடங்களுக்கு பிறகு தொலைக்காட்சிக்கு வரும் வைகை புயல்!
தமிழ்த் திரைப்பட நடிகரும், பின்னணிப் பாடகரும் ஆனா நடிகர் வடிவேலு, 1988 இல் டி.ராஜேந்தர் இயக்கிய என் தங்கை கல்யாணி என்ற திரைப்படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார். வடிவேலு தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்புத் திறமையால் வைகைப்புயல் என்னும் பட்டப்பெயருடன் பரவலாக அறியப்படுகிறார். சுமார் இருபது ஆண்டுகளாக சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர், 2011 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டார். குறிப்பாக, தேமுதிக தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
ஆனால் தேர்தலில் தி.மு.க கட்சி தோல்வியை தழுவியதால், மாபெரும் சிக்கலுக்குள்ளான வடிவேலு அவர்கள், தேர்தல் முடிவுக்கு பிறகு, சுமார் 20 மாதங்களுக்கும் மேல் சினிமாக்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்தார். வடிவேலு திரையுலகை விட்டு இரண்டு ஆண்டு காலம் விலகி இருந்தார். தெனாலிராமன் என்ற திரைப்படத்தின் மூலமாக மீண்டும் நடிக்கத் தொடங்கினார். எஸ் பிக்சர்ஸ் தயாரித்த ‘இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி’ படப் பிரச்சினையில் தயாரிப்பாளர் சங்கம் இவருக்கு 2017 இல் ரெட் கார்டு போட்டது. பின்னர் தயாரிப்பு நிறுவனத்திடம் பிரச்சனை பேசி தீர்க்கப்பட்டுவிட்டதால் இவர் மீதான தடை 2021 ஆம் ஆண்டு நீக்கப்பட்டது. இந்த தடை நீங்கியதால் தற்போது வைகை புயல் வடிவேலு பல்வேறு படங்களில் நடிக்க துவங்கி உள்ளார்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையின் போது பிரபல தொலைக்காட்சியில் உருவாகும் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். இந்நிலையில் தீபாவளி நாளில் கலைஞர் டி.வி.-யில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை சந்திக்கவுள்ளார் வடிவேலு. நீண்ட காலத்துக்கு பின்னர் டிவி நிகழ்ச்சியில் வடிவேலு பங்கேற்கவுள்ளது பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.