சாவு மணி அடிக்கும் ஷவர்மா: திடீர் ரெய்டு காட்டிய அதிகாரிகள் !!
ஈரோடு கொல்லம் பாளையத்தில் நடைபெற்ற சோதனையில் 50 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 16 வயது மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக கெட்டுப்போன கோழி இறைச்சியில் செய்த ஷவர்மாவால் உயிரிழந்து இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் மாணவியிடம் ஷிகெல்லா பாக்டீரியா இருந்தது கண்டறியப்பட்டது.
இதன் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொல்லம்பாளையம் செயல்பட்டுவரும் பிரியாணி கடை மற்றும் 40க்கும் மேற்பட்ட ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஷவர்மா கடைகளில் 50 கிலோ ஆடு மற்றும் கோழி இறைச்சிகளை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவற்றை அழித்ததோடு கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்தியதால் அபராதம் விதித்தனர்.
இதனிடையே பிரபல பிரியாணி கடையில் உணவுப்பொருட்களில் கலர் பொடிகள மற்றும் கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்தி இருப்பதை கண்டறிந்த அதிகாரிகள் 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.