சென்னை பெருமழைக்கு மேக வெடிப்பு காரணமல்ல : புவியரசன் விளக்கம்
சென்னையில் நேற்று பெய்த அதிகனமழைக்கு மேக வெடிப்பு காரணம் இல்லை என்றும் மேலடுக்கு சுழற்சி திடீரென நிலப்பரப்பை நோக்கி நகர்ந்ததே காரணம் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.மேலும் அதிகனமழையை கணிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டதாகவும் புவியரசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறினார்.
வளி மண்டல மேலடுக்குச் சுழற்சியால் இன்று தான் கனமழை பெய்யும் என்று எதிர்பார்த்தோம் நேற்றே அதிகனமழை விடாமல் பெய்தது. கணிப்புகளையும் தாண்டி காற்றின் நகர்வு வேகமாக இருக்கவே அதிக கனமழை பெய்ததாக வானிலை மைய இயக்குநர் கூறியுள்ளார்.
அப்போது,சென்னையில் மேக வெடிப்பு ஏற்பட்டதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதனை மறுத்த புவியரசன், சென்னையில் பெய்த மழை மேக வெடிப்பு காரணம் இல்லை என்று கூறினார். மேலடுக்குச்சுழற்சி காரணமாகவே மழை பெய்தது. மேக வெடிப்பு என்றால் சில நிமிடங்களில் மழை கொட்டி விட்டு போய் விடும் என்று கூறிய புவியரசன் மேலடுக்கு சுழற்சியால்தான் பல மணி நேரம் மழை விடாமல் பெய்தது என்றும் தெரிவித்துள்ளார். மழையை கணிக்க சென்னையில் அதிநவீன கருவிகள் தேவைப்படுவதாகவும் புவியரசன் கூறியுள்ளார்.