#BREAKING கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு… இந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழக தேர்வுகள் கால வரம்பின்றி ஒத்திவைக்கப்படுவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்பட்டாலும், தேர்வுகள் அனைத்தும் நேரடியாகவே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று தீயாய் பரவி வரும் நிலையில், டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன.

தற்போது புதிதாக கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று தமிழகத்தில் தீவிரமெடுக்க தொடங்கியுள்ளதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்ற சந்தேகம் எழுந்தது. இதனிடையே கொரோனா பரவலை கருத்தில் கொண்டு செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி பேசியதாவது: பல்வேறு பல்கலைக்கழங்களைச் சேர்ந்த மாணவர்கள் முதல்வரிடம் வைத்த கோரிக்கையை அடுத்து டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஜனவரி 20ம் தேதி நடத்துவதாக அறிவித்திருந்தோம். தற்போது மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி, பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைக்க முடிவெடுத்துள்ளோம். அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு குறைவதைப் பொறுத்து தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

எழுத்துத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டாலும் செய்முறைத் தேர்வுகள் நடைபெறும் என்றும், விடுமுறை காலத்தை மாணவர்கள் சரியாக பயன்படுத்திக்கொண்டு தேர்வுக்கு தயாராக வேண்டும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கோரிக்கைவைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *