இயற்கை விவசாயம், நதி நீர் இணைப்பு… நிதி நிலை அறிக்கையில் முக்கிய அறிவிப்பு!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வரும் 2022-2023ம் ஆண்டுக்கான நிதி அறிக்கையில் இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும். இயற்கை உரங்கள் பயன்பாட்டுக்கு ஊக்கம் அளிக்கப்படும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
நிர்மலா சீதாராமன் கூறியதாவது: இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும். இயற்கை உரங்கள் பயன்பாட்டுக்கு ஊக்கம் அளிக்கப்படும். எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறு தானியங்கள் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மேலும் தொழில்நுட்ப ரீதியான வசதிகள் மற்றும் டிஜிட்டல் விஷயங்களை விவசாயிகளுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ட்ரோன் மூலம் விவசாய நிலங்களை அளப்பது மற்றும் விளைச்சல்களை கணிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
நாடு முழுக்க ஐந்து புதிய நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்கு திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் கோதாவரி – கிருஷ்ணா, காவிரி – பெண்ணாறு ஆகிய திட்டங்களும் அடக்கம். இதற்காக ரூ.44,000 கோடி செலவில் திட்டங்கள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் மொத்தம் 9,00,000 விவசாயிகள் பயனடைவார்கள். மாநிலங்களுக்கு இடையே கருத்து ஒற்றுமை ஏற்பட்ட பிறகே நதிநீர் இணைப்பு திட்டம் மேற்கொள்ளப்படும். அதன் பிறகே நிதியுதவி செய்யப்படும் என அறிவித்துள்ளார்.