தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது

ஒவ்வொரு வருடமும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இளம்பிள்ளை வாதத்தை தடுக்கும் பொருட்டு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.  இந்த சொட்டு மருந்து மூலம் குழந்தைகளின் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அவர்களது உடலை வைரஸ் தாக்குதலிலிருந்து பாதுகாக்கிறது.  கொரோனா பரவல் காரணமாக ஜனவரி மாதம் நடக்கவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து போடும் முகாமை இன்று தேனாம்பேட்டையில் தொடங்கி வைத்தார்.  இந்த முகாம்களில் சுமார் இரண்டு லட்சம் பணியாளர்கள் சொட்டு மருந்து வழங்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.  தமிழகம் முழுவதும் 43,000 சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது, மேலும் இந்த முகாம்களின் மூலம் 58 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போலியோ வைரஸ் நோயை முற்றிலுமாக ஒழித்த நாடுகளின் வரிசையில் இந்தியாவும் முன்னணி வகிக்கிறது.  இதன் காரணமாக இதுவரை இரண்டு தடவை செலுத்தப்பட்டு வந்த டோஸ்கள் தற்போது ஒரு தடவை மட்டுமே செலுத்தப்படுகிறது.  இந்த போலியோ சொட்டு மருந்து போடப்படும் முகாம்களில் பிற மாநிலத்தை சேர்ந்த குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  மேலும் சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளின் விரலில் மை வைக்கப்படும், இந்த நாட்களில் சொட்டு மருந்து பெறாத குழந்தைகளுக்கும் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் சொட்டு மருந்து வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *