இம்ரான் கான் அரசு கவிழும் நிலை..? நெருக்கடியை சந்திக்கும் பிரதமர் இம்ரான் கான்..!
பாகிஸ்தானில் ஆளும் கட்சியாக இருக்கும் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியானது தன்னுடைய பெரும்பான்மையை இழந்த நிலையில், இம்ரான் கானின் அரசானது கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஒரு கட்சி ஆட்சி அமைக்க வேண்டுமானால் மொத்தம் உள்ள 342 தொகுதிகளில் 172 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதன்படி தற்போது ஆட்சியில் இருக்கும் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சி, முத்தாஹிதா குவாமி மூவ்மென்ட் (எம்.கியூ .எம்) என்ற கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தது. இந்நிலையில் பிரதமர் இம்ரான் கான் மீது ஏற்பட்ட நம்பிக்கையின்மை மற்றும் பாகிஸ்தான் சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடி போன்ற விஷயங்களில் ஏற்பட்ட பிரச்சனைகளால் எம்.கியூ .எம் கட்சி அதன் கூட்டணியில் இருந்து விலகியது. இதனால் இம்ரான்கானின் அரசு ஆட்சியை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
முத்தாஹிதா குவாமி மூவ்மென்ட் (எம்.கியூ .எம்) கட்சியின் இந்த அறிவிப்பால் எதிர்க்கட்சியான நவாஸ் முஸ்லீம் லீக் பலம் 177 ஆக அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் வியாழக்கிழமை (மார்ச் 31) நடைபெறவுள்ளது.
நாளை நடைபெறும் இந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு க்கு பிறகு இம்ரான்கான் பதவி விலக உள்ளார் என கூறப்படுகிறது. ஆட்சி விலகல் குறித்து பிரதமர் இம்ரான் கான் பேசுகையில், “நான் எதற்கும் தலைவணங்க மாட்டேன் என்றும், என்னை ஆட்சியிலிருந்து நீக்க வெளிநாட்டிலிருந்து சிலர் பணம் உதவி செய்து வருகின்றனர். அதன் காரணமாக தான் இந்த சூழ்ச்சி நடைபெற்று வருகிறது. அது தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.” என்று இம்ரான் கான் தெரிவித்தார்.