சிலர் என் மீது உண்மைக்கு மாறான தகவலை வெளியிட்டுள்ளனர்-ராதாரவி!
தென்னிந்திய சினிமா டப்பிங் கலைஞர்கள் சங்க தலைவராக இருக்கும் ராதாரவி மீது விருப்பம் இல்லாத சிலர் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ராதாரவியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது, சினிமா டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் எந்த தவறும் நடக்கவில்லை. சங்க உறுப்பினர்கள் நலனுக்காக நான் உழைத்து இருக்கிறேன். சங்கத்துக்கு இடம் வாங்கி அதில் அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.
சங்க தேர்தலில் ஓட்டுப்போட தகுதி உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் எனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் சொல்லவில்லை. ஆனால் சங்கத்தில் இருந்து நீக்கி வைக்கப்பட்டுள்ள தாசரதி போன்ற சிலர் என் மீது உண்மைக்கு மாறான தகவலை வெளியிட்டுள்ளனர்.
சங்கத் தேர்தல் விரைவில் நடக்க இருப்பதால் இப்படி பேசுகிறார்கள். தேர்தலில் நான் வெற்றி பெற்றதும் இவர்கள் போய்விடுவார்கள். நடிகர் சங்கத்தில் எனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடியானதை பற்றி இவர்கள் ஏன் பேசுவதில்லை. டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் எந்த தவறும் நடக்கவில்லை என்று தொழிலாளர் நலத்துறையிடம் ஆதாரங்களை சமர்ப்பித்து உள்ளோம். தொழிலாளர் நலத்துறை எனக்கு எதிராக பேசுபவர்களை கோர்ட்டுக்கு தான் போகச் சொல்லி இருக்கிறது. என் மீது எந்த குற்றச்சாட்டும் சொல்லவில்லை என்று கூறினார்.