சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை தயாரிக்கிறார் இளையராஜா?
ரஜினிகாந்த் நடித்து தீபாவளி பண்டிகை அன்று வெளியான அண்ணாத்த படம்ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூல் பார்த்ததாக படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்தனர். அண்ணாத்த ரிலீசுக்கு பின் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.
வீட்டில் ஓய்வு எடுத்து வரும் ரஜினி தற்போது புதிய படத்தில் நடிக்க தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அவருக்கு 169-வது படம். ரஜினியின் புதிய படத்தை இயக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இயக்குனர்கள் தேசிங்கு பெரியசாமி, நெல்சன் தீலிப்குமார், கார்த்திக் சுப்புராஜ், பாண்டியராஜ், கேஎஸ் ரவிக்குமார், பால்கி ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன.
இதில் பால்கி இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவர் இந்தியில் அமிதாப் பச்சனை நடிக்க வைக்க தயார் செய்த கதையை ரஜினியிடம் சொன்னதாகவும், அந்த கதை பிடித்துப்போய் நடிக்க ரஜினி சம்மதம் சொல்லி விட்டதாகவும், இந்த படத்தை இசையமைப்பாளர் இளையராஜா தயாரிக்க இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பால்கி இந்தியில் ஷமிதாப், பேட்மேன் உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார்.