அரையிறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு முன் ஐசியூவில் இருந்த பாகிஸ்தான் வீரர்..!
உலகக் கோப்பை டி20 தொடர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்தப்போட்டியில் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் இந்த உலக கோப்பை தொடரில் மூன்றாவது முறையாக அரை சதம் அடித்தார். இருப்பினும், ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டோனிஸ் மற்றும் மேத்யூ வேட் சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலிய அணியை வெற்றிபெறச் செய்தனர். அவர்கள் இருவரும் முறையே 40 மற்றும் 41 ரன்கள் குவித்தனர்.
இந்தப் போட்டி முடிவடைந்த பிறகு, டாக்டர் நஜிப் என்பவர், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் நெஞ்சுவலியினால் இரண்டு நாட்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தார் என தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் 9-ஆம் தேதி கடுமையான நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட அவர் இரண்டு நாட்கள் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்ததாக நஜிப் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், அவர் நெஞ்சு வலியில் இருந்து மீண்டு வந்து கிரிக்கெட் ஆடிய விதம் ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது என அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த நிலையில், வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த இறுதிப் போட்டியில் யார் வெல்லப் போகிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.