முந்தைய அரசாங்கம் தங்களுக்காக மட்டுமே செயல்பட்டது… யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு..!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று எதிர்க்கட்சிகளை தாக்கிப் பேசியுள்ளார். முந்தைய அரசு தங்களுக்காக செயல்பட்டதே தவிர, சமூக நலனுக்காக செயல்படவில்லை. அவர்களுக்கு மக்களின் மீது அக்கறையும் கிடையாது என குற்றம்சாட்டி உள்ளார். அதுபோல, அவர்களின் ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து இருந்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். சட்டம் ஒழுங்கு குறைபாடு காரணமாகவே மேற்கு உத்தர பிரதேச மக்கள் புலம்பெயர்ந்து வந்ததாக அவர் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்தில் இன்று பேசிய யோகி ஆதித்யநாத், மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள வியாபாரிகள் கட்டாயப்படுத்தப்பட்டு புலம்பெயர்ந்து வருவதாக கூறினார். அதே, போல அங்கு கலவரங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கெல்லாம் காரணம் முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் என அவர் குற்றம் சாட்டினார். ஆனால், பாஜக ஆட்சியில் தற்போது அந்த நிலை மாறி வருகிறது. பாஜக ஆட்சியில் மக்கள் அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தின் அன்னைகள் மற்றும் சகோதரிகள் தற்போது பத்திரமாக உள்ளார்கள் என அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜகவின் இந்த ஐந்து ஆண்டுகால ஆட்சி பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. தற்போது மாநிலத்தில் அமைதியான சூழல் நிலவுகிறது. வணிகர்கள் யாரும் புலம் பெயர்வதும் இல்லை என்றார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் வருகிற பிப்ரவரி 10 முதல் தேர்தல் தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் முடிவுகள் வருகிற மார்ச் 10 அன்று வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *