அகிலேஷ் யாதவை கிண்டலடிக்கும் மத்திய அமைச்சர்..!
இந்தியாவில் உத்தரப் பிரதேசம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் தேதியும், தேர்தல் நடத்தை விதி முறைகளையும் அண்மையில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதனயடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ள வாக்குறுதியை மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கிண்டலடித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் தான் ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அகிலேஷ் யாதவ் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டுள்ளார். இதையடுத்து, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கூறியதாவது, சமாஜ்வாதி கட்சி ஆட்சியின்போது உத்தரப்பிரதேசத்தில் வீடுகளில் உள்ள மின் ஒயர்கள் துணி காயப்போடவே பயன்பட்டன என நகைச்சுவையாக கூறியுள்ளார். உத்தர பிரதேசத்தில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், 300 யூனிட்டுகள் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.ஆனால், 300 மணி நேரம் கூட அவர்களால் மின் விநியோகம் கொடுக்க இயலாது எனவும் அவர் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 10-ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கையானது மார்ச் 10 அன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.