டி.டி.வி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டாக பிரிந்தது. மறைந்த ஜெயலலிதாவின் தொகுதியான ஆர் கே நகருக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தேதி அறிவித்தது.

இதையடுத்து இரட்டை இலைச் சின்னத்தை தங்களுக்குத்தான் வழங்க வேண்டும் என இரு அணிகளும் தனித்தனியாக மனு தாக்கல் செய்தன. இதையடுத்து தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது.

சசிகலா அணி தரப்பில் இரட்டை இலை சின்னத்தை பெற தினகரன் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது தெரியவந்தது. தேர்தல் ஆணையத்திடம் முறைகேடான முறையில் சின்னத்தை மீட்க பெங்களூரை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க டிடிவி தினகரன் அணியினர் முயன்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இரட்டை இலை சின்னத்தை பெற சுகேஷ் ரூ 50 கோடி லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதில் முன்பணமாக ரூ 2 கோடியை தினகரன் கொடுத்ததாகவும் புகார் எழுந்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த புகார் மீது அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தியது.அதில் சட்டவிரோதமாக பண பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிபட்டது.சட்ட விரோதப் பணப்பரிவர்த்தனைத் தொடர்பாக, டெல்லியில் உள்ள மத்திய அமலாக்கத்துறையின் அலுவலகத்தில் கடந்த 12-ஆம் தேதி பகல் 12.00 மணியளவில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேரடியாக ஆஜரானார்.

அவருடன், இந்த விவகாரத்தில் இடைத்தரகராகச் செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகரும், அமலாக்கத்துறையில் ஆஜராக்கப்பட்டு, இருவரையும் ஒன்றாக அமர வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.சுமார் 11 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது. விசாரணைக்கு பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன், ”சுகேஷ் சந்திரசேகரன் ஒவ்வொருமுறை வரும்பொழுது ஒவ்வொரு வாக்குமூலம் கொடுப்பதால் அமலாக்கத்துறை கேள்விகளை என்னிடம் கேட்கிறது. கேட்பது அவர்களின் கடமை” என்றார். “இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்த வழக்கில் நான் சொல்ல விரும்புவது நான் நிரபராதி.. நான் எந்த தப்பும் செய்யல… யாரோ கொடுக்கும் ஸ்டேட்மென்ட்டுக்காக என்னை கூப்பிட்டு விசாரிக்கும் கட்டாயம் அமலாக்கத்துறைக்கு இருக்கு. எனவே கூப்பிட்டு விசாரிக்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி ஆஜராகும்படி தினகரனுக்கு டெல்லி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *