#Breaking ஜெய்பீம் விவகாரம்: சூர்யா, ஜோதிகா மீது வழக்குப்பதிய உத்தரவு!

நடிகர் சூர்யாவின் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் காவல்துறையால் இருளர் சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் லாக் அப் டெத் தொடர்பான விவகாரங்கள் இடம் பெற்றிருந்தன. இப்படத்திற்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்தும் வரவேற்பு கிடைத்த நிலையில், இத்திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தின் அடையாளமான அக்னி கலசத்தை காலண்டர் ஒன்றில் பயன்படுத்தியதாக கூறி பாமக மற்றும் பல்வேறு வன்னியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் ஜெய்பீம் திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திட்டமிட்டு வன்னியர் சமூகத்தின் மீது அவதூறு பரப்புவதாகவும், நடிகர் சூர்யா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதற்கு இத்திரைப்படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் வருத்தமும் தெரிவித்திருந்தார்.  

தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல், கலை இயக்குனர், மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், கவசம் கிளாரட் சபை ரபேல்ராஜ் உள்ளிட்டோர் மீது இந்திய தண்டனை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளிக்கப்பட்டது.

ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் நாயகர் என்பவர் வேளச்சேரி காவல் ஆய்வாளரிடம் 2021 டிசம்பர் 8ல் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி புகார் மீது 5 நாட்களில் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென உத்தரவிட்டதோடு, முதல் தகவல் அறிக்கையை மே 20ல் அதை தாக்கல் செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *