சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய அதிமுக, பாஜக உறுப்பினர்கள்
சட்டப்பேரவையில் தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்கியது. இதையொட்டி, துறை வாரியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது. அப்போது, சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார்.
அப்போது சொத்து வரியை குறித்து பேசிய ஸ்டாலின் சொத்து வரி உயர்வை மனமுவந்து செய்யவில்லை என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர் உள்ளாட்சி அமைப்புகள் வருவாய் பற்றாக்குறையில் இருக்கும் நிலையில் அதை சமாளிக்க சொத்து வரி உயர்வு தேவை. ஏழை எளிய, நடுத்தர மக்களை பாதிக்காத வகையில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு எதிர்க்கட்சிகளும், தோழமைக் கட்சிகளும் துணை நிற்க வேண்டும். மாநில வளர்ச்சியில் எந்தவித அரசியலும் செய்ய வேண்டாம் என்று கூறியிருந்தார்.
ஆனால் முதல்வர் ஸ்டாலின் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்த அதிமுக மற்றும் பாஜகவை சேர்ந்த உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.மேலும், சொத்து வரியை திரும்பப் பெறக் கோரி அதிமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.