யூ 2 புரூட்டஸ் யூ-டியூப் சேனலுக்கு எதிராக அர்ஜூன் சம்பத் ஆர்ப்பாட்டம்!
சிவபெருமானை இழிவுபடுத்திய யூ 2 புரூட்டஸ் என்ற யூடியூப் சேனலை தடை செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சிவபெருமான் உள்ளிட்ட கடவுள்களை இழிவாக பேசும் U 2 Brutus யூ டியூப் சேனலை தடை செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிதம்பரம் நடராஜரை அவதூறாக பேசுவதை கண்டித்தும், யூ2 புரூட்டஸ் சானலின் மைனர் விஜயை கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பேசுகையில், சிவபெருமான், சிதம்பரம் நடராஜர் குறித்து அவதூறாக பேசி வரும் யூ2 புரூட்டஸ் என்ற யூடியூப் சேனலை தடை செய்ய வேண்டும். முன்னதாக கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் முருகப்பெருமான் குறித்தும் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக பேசியதனை ஒட்டி அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அவதூறான காட்சிகள் நீக்கப்பட்டது.
தொடர்ந்து, கடவுள்கள் குறித்து அவதூறாக பேசி வருபவர்களின் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முதல்வரின் மனைவி ஆன்மீக ரீதியாக கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்கிறார். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவும் இது போன்ற அவதூறுகளை ஏற்றுக் கொள்ள முடியுமா? என கேள்வி எழுப்பினார்
திமுக அரசும், அமைச்சர் சேகர் பாபுவும் சிவராத்திரி விழாவை பிரமாண்டமாக கொண்டாடி நாங்களும் இந்து ஆதரவாளர்கள் தான் என்று கூறிக்கொண்டு இருக்கின்றனர். சிதம்பர தத்துவம் என்பது எவ்வளவு சிறப்பானது. பெரியார், அண்ணா உள்ளிட்டோர் அவதூறாக பேசினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அரசு, சிவபெருமானை அவதூறாக பேசும் மைனர் விஜய் மீது ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை. ஏன் மக்களுக்கு விரோதமாக செயல்படுகிறது எனவும், இது தொடர்பாக ஸ்டாலின் அரசு யூ2 புரூட்டஸ் சானல் மீது நடவடிக்கை எடுத்து இந்து மக்களின் நம்பிக்கையை பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்.