ஒரு லட்சம் மரங்களுக்கு விவேக் பெயர்… அமைச்சர் மா.சு. அதிரடி அறிவிப்பு!
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் சிறந்த நகைச்சுவை நடிகராக வாழ்ந்து மறைந்த பத்மஸ்ரீ விவேக் வீடு அமைந்துள்ள விருகம்பாக்கம் பத்மாவதி சாலையை “சின்னக் கலைவானர் விவேக் சாலை” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட பெயர் பலகையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் திறந்து வைத்ததார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மா.சுப்பிரமணியன்: விவேக் எனது நீண்ட கால நண்பன்.
கோடை வெப்பத்தில் இருந்து மக்கள் தங்களை எப்படி தற்காத்து கொள்ளவது என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நாளை நடைபெற இருக்கிறது என்றார்.
சைதாப்பேட்டை பகுதியில் நாட்டு மரங்கள் நிறைய நட்டு வைத்து இருக்கிறோம். இன்னும் இரண்டு ஆண்டில் வனத்தில் ஒரு தொகுதி என்ற நிலைமையில் சைதாப்பேட்டை தொகுதி இருக்கும்.
சைதாப்பேட்டையில் 98 ஆயிரம் மரம் தற்போது வரையும் நட்டு இருக்கிறோம்.1 லட்சம் மரம் நட்டு அந்த 1 லட்சமாவது மரத்திற்கு நடிகர் விவேக் மரம் என்ற பெயர் வைக்க இருக்கிறோம். ஆனால் அதனை பார்க்க அவர் தான் இல்லை என கூறி வருந்தினார்.
பொதுவாக தற்போது பெயரை சாலைக்கு வைப்பது இல்லை. அப்படி பெயர் வைக்க வேண்டும் என்றால் பல்வேறு இடங்களில் அதற்கு அனுமதி வழங்க வேண்டும் ஆனால் விவேக் பெயரை வைக்க வேண்டும் கேட்டவுடன் அதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
விவேக் மறைவுக்கு 2 நாட்களுக்கு முன்பு அப்போது இருந்த ஆளும் கட்சியாக இருந்தவர்கள் விவேக்கை தடுப்பூசி செலுத்தி கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்கள்.
அவர் இறப்புக்கு 2 நாட்களுக்கு முன்பு கூட தடுப்பூசிக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகு உயிரிழந்து இருக்கிறார். தமிழகத்தில் தடுப்பூசி செலுத்த ஒரு பிராண்ட் ஆக நடிகர் விவேக் செயல்பட்டார்
தமிழகத்தில் 11 கோடி பேர் தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள். 88% நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கிறது. தமிழகத்தில் 2 கோடி பேர் இன்னும் தடுப்பூசி செலுத்தாமல் இருக்கிறார்கள்.
வரும் 8 ஆம் தேதி 1 லட்சம் இடங்களில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற இருக்கிறது. இன்றும் அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் தமிழக அரசும், திமுகவும் துணை நிற்கும். நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவர்களுக்கு இறுதியில் மரக்கன்று வழங்கப்பட்டது, மேலும் மரக்கன்று மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் நட்டு வைத்தார்.