சூறைக்காற்றுடன் கொட்டிய கனமழை: 2 லட்சம் வாழை மரங்கள் சேதம் !
கடலூரில் நேற்று இரவு சூறைக்காற்றுடன் பெய்த கனமழையில் சிக்கி 2 லட்சம் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்ததால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ராமபுரம், சாத்துன்னிய குப்பம், ஓதன்ய குப்பம், காட்டுப்பாளையம் உள்ளிட்ட பலகிராமங்களில் வாழை சாகுபடி பிரதானமாக செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் பூ வைத்து காய் குலை தள்ளிய போது வாழை மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். ஒவ்வொரு வாழை மரத்திற்கும் சுமார் 150 ரூபாய் செலவு செய்த நிலையில் வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்துள்ளதால் கடன்சுமை அதிகரித்ததாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு வேளாண் துறை அதிகாரிகளுடன் உடனே கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று திடீரென சுமார் 2 மணி நேரம் கொட்டிய கனமழையால் காற்றாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பெரியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாரதி அண்ணா நகர் சுற்றுப்புர விவசாயிகள் விளைப்பொருட்களை எடுத்துச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும், அக்கரைக்கு சென்ற விவசாயிகள் திரும்ப முடியா நிலை ஏற்பட்டது. இதனால் வேலைக்குச் சென்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆற்றை கடக்க முடியாமல் அக்கறையே கூடாரங்களை தங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் இங்கு பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.