உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்
உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பு என்றால் ஒரு பிரத்தியோக வரவேற்பு இருக்கும். ஆப்பிள் ஐபோன், ஸ்மார்ட் வாட்ச், டேப்லெட் என அந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் நீண்டு கொண்டே போகும்.ஆனால் இந்த கேட்ஜெட்களின் விலை தான் சற்று அதிகமாக இருக்கும். இருப்பினும் இதில் அதிக பாதுகாப்பு வசதி இருப்பதால், விலை சற்று அதிகமானதாக இருந்தாலும் மக்கள் இதனை வாங்குகிறார்கள்.
இந்நிலையில் அமெரிக்க கலிபோர்னியா மாகாணத்தில் நள்ளிரவு 1 மணியளவில், மின்சார சைக்கிளில் சென்றிருந்த ஒருவர் திடீரென்று விபத்துக்குள்ளானார். அப்போது அந்த நபரின் ஆப்பிள் வாட்ச், 911 என்ற உதவி எண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இச்செய்தி காவல் துறைக்கு எட்டிய உடனே, காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு அவர் சாலையில் சுயநினைவின்றி கிடப்பதையும் அவரது தலையில் இருந்து ரத்தம் வழிவதையும் கண்ட காவல்துறையினர் அவரை உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். காயம் காரணமாக பல நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டிய நிலையாயிற்று. ஆனால் அவர் உயிர் தப்பி விட்டார்.
ஆப்பிள் வாட்சின் இந்த கண்டறிதல் அம்சம் கடந்த ஆண்டு அறிமுக படுத்தப்பட்டது. இந்த வாட்சை கட்டி கொண்டிருக்கும் போது சைக்கிளில் இருந்து கீழே விழுந்தாலும் அல்லது உடற்பயிற்சிகளின் போது கீழே விழுந்து சுயநினைவை இழந்தாலும் உடனே மருத்துவ உதவிக்கு அழைத்து விடும்.