தாய்மாமனாக அமர்ந்த இறந்த தம்பி… தத்ரூப சிலைக்காக எவ்வளவு லட்சம் செலவானது தெரியுமா?
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள வினோபா நகரைச் சேர்ந்த சவுந்தரபாண்டி – பசுங்கிளி தம்பதியின் மகன் பாண்டித்துரை. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கார் விபத்து ஒன்றில் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 21. இந்நிலையில் நேற்று பாண்டித்துரையின் மூத்த சகோதரியான பிரியதர்ஷினியின் மகள் தாரிகா ஸ்ரீ மகன், மோனேஷ் குமரன் ஆகியோருக்கு ஓட்டன் சத்திரத்தில் நேற்று காதணி விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தாய்மாமன் ஸ்தானத்தில் இருந்து குழந்தைகளை மடியில் வைத்துக்கொள்ள வேண்டிய பாண்டித்துரை உயிரிழந்ததால், அவருடைய பெற்றோர் உருக்கமான முடிவு ஒன்றை எடுத்தனர். அதன் படி பாண்டித்துரையின் தத்ரூபமாக சிலிகான் சிலையை வடிவமைத்துள்ளனர். அந்த சிலையுடன் மூத்த சகோதரியின் வீட்டிற்கு ஊர்வலமாக சென்று தாய்மாமன் செய்முறைகள் அனைத்தையும் செய்துள்ளனர். பின்னர் பாண்டித்துரையின் சிலிக்கான் சிலை மடியிலேயே அமரவைத்து, குழந்தைகள் இருவருக்கும் காதுகுத்தும் நிகழ்வையும் சிறப்பாக நடத்தியுள்ளனர்.
இது விழாவிற்கு வந்த உறவினர்கள், நண்பர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தத்ரூபமாக பாண்டித்துரை வேட்டி, சட்டை, துண்டு அணிந்து சேரில் சிலையாக அமர வைக்கப்பட்டிருந்தார். இதற்காக பெங்களூருவில் சிலை செய்பவரிடம் சொல்லி பாண்டித்துரை சிலையை ரூ.5 லட்சம் செலவில் செய்து வாங்கியுள்ளனர்.