இனி கட்டாயமில்லை… எங்கே வேணாலும் ஜாலியா போகலாம்…!
பொது இடங்களுக்கு வருவோர் கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயமில்லை. இது தொடர்பாக ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை பொது சுகாதாரத் துறை திரும்பப் பெற்றது. நாடுமுழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், ஏப்.1-ம் தேதி முதல் அனைத்து கட்டுப்பாடுகளும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி, பல்வேறு மாநிலங்கள் கரோனா கட்டுப்பாடுகளை ரத்து செய்துள்ளன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த காலகட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் பொது சுகாதாரத் துறை விதித்து வந்தது. அதன் ஒருபகுதியாக, கொரோனா 2-ம் அலையின் பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பரில் ஓர் அறிவிப்பை பொது சுகாதாரத்துறை வெளியிட்டது.
அதன்படி, பொது இடங்களுக்கு வருபவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனரா என்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுக்குமாறு மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, திரையரங்குகள், வணிக வளாகங்கள், சந்தை பகுதிகள், சாலைகள், பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து பொது இடங்களிலும் தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், இந்த உத்தரவை பொது சுகாதாரத் துறை திரும்பப் பெற்றுள்ளது.
இதுகுறித்து அனைத்து சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இயக்குநர் செல்வவிநாயகம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கரோனா தடுப்பூசி முதல் தவணை 92 சதவீதம் பேருக்கும், இரு தவணைகள் 75 சதவீதம் பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதன் பயனாக கரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து பொது இடங்களுக்கு வருவோர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு திரும்பப் பெறப்படுகிறது.
அதேவேளையில் முகக் கவசம் அணிதல், தனிநபர் இடைவெளி உள்ளிட்டநோய்த் தடுப்பு விதிகளை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். தடுப்பூசி போட யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. தகுதியுடைய மக்கள், அவர்களே விரும்பி வந்து முதல் தவணை, 2-ம் தவணை, பூஸ்டர் தவணைதடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இதுபற்றி மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.