காவி மயமாகிறதா கல்வி?? பாஜகவின் இரட்டை வேடத்தை தோலுரித்த கி.வீரமணி

சென்னை மருத்துவக் கல்லூரி ஒன்றில் வரதட்சணைக்கு வக்காலத்து வாங்கி எழுதப்பட்ட பாடத்தை தடை செய்த ஒன்றிய அரசு, பாபயோனியில் பிறந்தவர்கள் பெண்கள் என்று கூறும் கீதையை பா.ஜ.க. ஆளும் குஜராத், இமாச்சலப்பிரதேசத்தில் பாடநூலாக வைக்கலாமா? ஏனிந்த இரட்டை வேடம் என்ற வினாவை எழுப்பியுள்ளார்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி . இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “சென்னையில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் ஒரு பெண்மணி எழுதிய நூலை, செவிலியர்களுக்கான பாட புத்தகங்களில் ஒன்றாக வைத்தது குறித்து நாடாளுமன்றத்தில் கண்டனம் எழுந்தது! திருமணத்தின்போது பெண்களுக்காக ‘வரதட்சணை’ வாங்கப்படுவதை நியாயப்படுத்தி, அதனால் பல நன்மைகள் ஏற்படுகின்றன என்ற பிற்போக்கான, பொருந்தா கருத்தை வலியுறுத்தியது அந்தப் புத்தகம் என்பதால், ஒன்றிய அரசின் கல்வி  அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள், ‘‘உடனடியாக அது பாடப் புத்தகப் பட்டியலிலிருந்து நீக்கப்படும்; அதைப் பாட நூலாக வைத்தவர்கள்பற்றி முழு விசாரணை நடத்தப்படும்‘’ என்று கூறியிருக்கிறார்!

வரதட்சணை திராவிடத்திற்கு எதிரானது அதை நாம் வரவேற்கிறோம்; ‘வரதட்சணை’ என்று திராவிடத்திற்கு எதிராக பெண்களை விலைச் சரக்குபோல் கருதிடும் வேதனையை எதிர்த்து நடவடிக்கை எடுக்கப்படுவது தேவையானது மட்டுமல்ல, அக்கருத்து சட்ட விரோதமானது என்பதும் கூடுதல் வாதமாகும்!இதற்காக இவ்வளவு விரைந்து நடவடிக்கை எடுக்கும் ஒன்றிய கல்வி அமைச்சர், குஜராத் மாநிலத்தில் ‘பகவத் கீதை’யைப் பாட நூலாக அந்த மாநில அரசு வைத்துள்ளதுபற்றி கவனத்தில் கொள்ளாதது ஏன்? முன்பு மோடி முதலமைச்சராக இருந்தபோது, எட்டாம் வகுப்புப் பாடப் புத்தகங்களில் மனுதர்மத்தைப் போதித்தது அந்த அரசு, அப்போதே  நாடு தழுவிய அளவில் கடும் கண்டனம் எழுந்தது!
அதேநேரத்தில், காவிக் கட்சியின் அரசியல் லேபரட்டரி என்ற பரிசோதனைக் கூடம் என்பதை நிரூபிக்கும் வண்ணம் பகவத் கீதையைப் பாட நூலாக கல்வி நிறுவனங்களில் வைத்துள்ளார்கள்.அம்மாநில அரசைப் பின்பற்றி மற்றொரு பா.ஜ.க. ஆளும் மாநிலமான இமாச்சலப்பிரதேசத்திலும் ‘பகவத் கீதை’ பாட நூலாம்!


‘பகவத் கீதை’ – அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் சமத்துவத்திற்கு எதிரான கருத்தான ஜாதியை, ஜாதி தர்மத்தை வலியுறுத்தி பேதம் வளர்க்கும் மனித சமூக சமத்துவத்திற்கு எதிரான நூல்.


‘‘சதுர்வர்ணம் மயாசிருஷ்டம்‘’ – நான்கு வருணத்தை – ஜாதியை நானே உண்டாக்கினேன். நானே நினைத்தாலும் ஜாதி தர்மத்தை மாற்ற முடியாது’’ என்றும்,
‘‘பெண்களும், சூத்திரர்களும் பாபயோனியிலிருந்து பிறந்தவர்கள்’’ என்று எல்லாம் கேவலப்படுத்தி, பிறவி இழிவைச் சுமக்க வைத்த ஆரிய மனுதர்மத்தை போதிக்கும் நூல்.
பெண்களுக்கு வரதட்சணையை நியாயப்படுத்தும் நூலை பாடமாக வைப்பதை எதிர்த்து நடவடிக்கை எடுத்தது சரியானது.ஆனால், அதே நியாயம் ‘பகவத் கீதைக்குப் பொருந்தாதா?’ ‘ஒருகுலத்துக்கொரு நீதி’ என்ற கொடுமை மாதிரி, ஆரிய, சனாதன மத நூலாக இருந்தால், அதனை ஏற்பது, அனுமதிப்பது எவ்வகையில் நியாயமானது? சரியானது?

மதச்சார்பின்மை காற்றில் பறக்கலாமா?
அரசமைப்புச் சட்டத்தின் ‘மதச்சார்பின்மை’ (செக்குலர்) என்ற தத்துவம் காற்றில் பறப்பதா? பிற மதத்தவர் நூலையும் பாடத் திட்டமாக வையுங்கள் என்று கேட்டால், ஏற்பார்களா?
ஆட்சி, அதிகாரம் தங்களிடம் சிக்கிக் கொண்ட ஒரே காரணத்தால், அநீதி – நீதியாக மாறிவிடுமா?பொதுவான மக்கள் இதுபற்றி புரிந்துகொள்ளமாட்டார்களா?
எனவே, இது வன்மையான கண்டனத்திற்குரியது – மாற்றப்படவேண்டும்.” என்று கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *