பொருளாதார நெருக்கடியை தவிர்க்க நேபாள அரசு மேற்கொள்ளும் சில யுக்திகள்..!!!
நேபாளத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் அந்நாட்டு பொருளாதார நெருக்கடியை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்தின் முக்கிய வருவாயாக இருப்பது சுற்றுலா மற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் உதவி தான். கொரோனாவின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே இது முற்றிலும் முடங்கியுள்ளது.
கடந்த மார்ச் மாத நிலவரப்படி, நேபாளின் அன்னிய செலவாணி கையிருப்பு வெறும் 975 மில்லியன் டாலர் மட்டுமே உள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்தை ஒப்பிடுகையில் 200 மில்லியன் டாலர் அந்நிய செலாவணி குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் அந்நிய செலாவணி குறையாமல் இருக்க நேபாள அரசு சில முக்கிய நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன. அதன்படி சொகுசு கார்கள், ஆல்கஹால், புகையிலை போன்ற பொருட்கள் இறக்குமதி செய்ய நேபாள அரசு தடை விதித்துள்ளது. மேலும் 600 டாலர்களுக்கு மேல் விலையுள்ள மொபைல் போன்கள், பெரிய எஞ்சின் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளது.
இந்த தடை நடவடிக்கையானது ஜூலை இறுதி வரை அல்லது இந்த ஆண்டின் இறுதி வரை தொடரும் என நேபாள அரசு தெரிவித்துள்ளது. இருந்த போதிலும் இன்னும் சில மாதங்கள் மட்டுமே அந்நிய செலாவணி கையிருப்பு நீடிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது போன்ற நடவடிக்கையால் ஓரளவு பொருளாதார நெருக்கடியை குறைக்க முடியும் என நேபாள அரசு தெரிவித்துள்ளது.
இருப்பினும் அதிகரித்து வரும் எண்ணெய் விலையானது நேபாளின் நாட்டின் கையிருப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அதிகாரிகள் வேதனை தெரிவித்தனர்.