விக்னேஷ் மரணத்தில் முக்கிய விஷயத்தை மூடி மறைக்கப்பார்த்த போலீஸ்… தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையம் பரபரப்பு தகவல்!
விசாரணை கைதி விக்னேஷ் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் தான் தாழ்த்தப்பட்ட ஆணையம் விசாரணை மேற்கொள்கிறது என தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹெல்டர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் விசாரணைக் கைதி விக்னேஷின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்த சூழ்நிலையில் மரணம் நிகழ்ந்த காவல் நிலையத்தில் தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹெல்டர் ஆய்வு செய்தார்.
அதே போல், சென்னை ஐஐடியில் தாழ்த்தப்பட்ட மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹெல்டர் அங்கு சென்று நேரில் ஆய்வு செய்தார், மேலும், பாதிக்கப்பட்ட மாணவியிடம் நடந்தவற்றை கேட்டு தெரிந்துகொண்டார்.
பின்னர், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர், அருண் ஹெல்டர், விக்னேஷ் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை என சொல்லி மூடிமறைக்க காவல் துறையினர் பார்த்தார்கள் ஆனால் அந்த ஆவணத்தை டெல்லியில் இருந்து புறப்படும் போது எடுத்து வந்து இருக்கிறோம் அவரது சகோதரர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்பது தற்போது காவல்துறையிடம் கொடுத்துள்ளோம்.
நாங்கள் நடத்தியுள்ள இந்த விசாரணை மூலம், விக்னேஷ் மரண வழக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சேர்க்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது, அதன் மூலம் அவரது குடும்பத்திற்கு 6 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என கூறினார்.
விக்னேஷின் மரணத்திற்கு யார் காரணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் வெளி வர வேண்டியிருக்கிறது தற்போது மூன்று காவல் துறையினருக்கும் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். விக்னேஷ் மரணத்தருவாயில் யார் யாரெல்லாம் அப்போது பணியில் இருந்தார்களோ அவர்கள் மீதும் நடவடிக்கை தேவை என்று கூறிய அவர் மேலும் இவ் வழக்கில் சிபிசிஐடி தனது அறிக்கை தர வேண்டும் அதே போல விக்னேஷின் பிரேத பரிசோதனை அறிக்கை வர வேண்டும் அதன் பின்னர் நாங்கள் ஒரு அறிக்கையை ஆணையத்திடம் தாக்கல் செய்வோம் என கூறினார்.
இதேபோல சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தினோம் அந்த பெண் தனக்கு என்ன நேர்ந்தது என்று எங்களிடம் சொன்னார் இதே போல அங்கு இருக்கக்கூடிய பேராசிரியர்களிடமும் விசாரணை செய்யப்பட்டது என தெரிவித்தார். ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் கூறியதும் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்பதே விதி என அவர் சுட்டி காட்டினார்.
தமிழ்நாட்டில் சாதி பிரச்னை அதிகமாக உள்ளது குறிப்பாக, ஒரு அமைச்சரே ( ராஜா கண்ணப்பன்) சாதி பெயர் சொல்லி திட்டுகிறார், ஆனால், அவர் மேல் நடவடிக்கை எடுக்காமல், பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சராக ஆக்கியுள்ளது இன்றைய நிலையாக தான் தமிழகத்தில் உள்ளது. இந்த இரு வழக்குகள் குறித்தும் 15 நாட்களில் அறிக்கையை தாக்கல் செய்ய இருப்பதாக அருண் ஹெல்டர் தெரிவித்துள்ளார்