பஞ்சத்தால் பத்திரிகைகள் மூடப்படும் அபாயம்
கடந்த 2019-ம் ஆண்டு சீனாவிலிருந்து உலக நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் உலகையே ஒரு உலுக்கு உலுக்கி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இலங்கையில் கடும் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்கு ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையெல்லாம் கடுமையாக உயர்ந்தது. உதாரணமாக அங்கு சமையலுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரின் விலை 2000 ரூபாயாகவும், பால் ஒரு லிட்டர் 250 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது. இலங்கையில் ஏற்பட்டிருக்கும் இந்த பொருளாதார பின்னடைவை சரி செய்ய பலவேறு நாடுகள் உதவி வருகிறது. ஆனாலும் அங்கு பிரச்சனை விட்ட பாடில்லை.இதில் செய்தித் தாள்களை அச்சிடும் கடதாசிகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஊடகத் தொழில் நலிவடையும் என்பதையும் கடந்து, தொலைக்காட்சி, இணையதளம் போன்ற வசதிகள் இல்லாத பின் தங்கிய பகுதிகளில் வசிப்பவர்கள் நாட்டு நடப்பு என்ன என்பதை அறிவதற்கான வாய்ப்புகளும் பறிபோகும் என்ற அச்சம் உண்டாகியுள்ளது.ஆனால், ஊடக நிறுவனங்கள் இத்தகைய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளதை இதுவரை தங்கள் கவனத்துக்குக் கொண்டுவரவில்லை என்று இலங்கை அரசு கூறுகிறது.
கொரோனா தொற்று, உணவுப் பொருள் பற்றாக்குறை, வேலைவாய்ப்பின்மை போன்ற பல்வேறு நெருக்கடிகளை இலங்கை ஒரு சேர சந்தித்து வரும் சூழலில், அவை குறித்த அரசின் அறிவிப்புகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்த செய்திகள் இலங்கையின் கடைசி கிராமம் வரை சென்று சேர்வதும் இதனால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அச்சுப் பத்திரிகையை மட்டுமே நம்பி, தகவல் அறிந்துக்கொள்ளும் கொழும்பு – கிரான்பாஸ் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் செய்தியாளர் கேட்டபோது .”பேப்பரை நாளாந்தம் வாங்குவேன். வீட்டில் இருக்கும் போது, இடைக்கிடை வாசிப்பேன். எங்களுக்கு ஒன்லயின்ல எல்லாம் செய்தி பார்க்க தெரியாது. நாங்க வயசானவங்க தானே! ஒன்லயின்ல பார்க்கக்கூடிய அளவு எமக்கு சரியான தெளிவில்ல. பேப்பர்ல இருந்தா, நேரம் கிடைக்கும் போது, செய்திகள வாசிப்பேன். எங்களுக்கு பேப்பர மாதிரி எப்படியும் வராது. பேப்பர பார்த்து பழகியதால, வேறு ஒன்றுலயும் செய்தி பார்த்த புரியாது” என்று கூறினார்.